காதல் மனைவிக்கு அரிவாள் வெட்டு... கணவன் தூக்கிட்டு தற்கொலை!! மயிலாடுதுறை அருகே பரபரப்பு

 

மயிலாடுதுறை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டிய கணவன், வீட்டிற்குள் சென்று கணவரும் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அறிவழகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பி உள்ளார். இவருக்கும் ஜெயினத் பிவி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில் மனைவி ஜெயினத்தின் நடத்தையின் மேல் சந்தேகம் அடைந்த அறிவழகனுக்கும் அவர் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை அறிவழகன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் வாய், கழுத்து, கைகள் ஆகிய இடங்களில் வெட்டுப்பட்ட ஜெயினத் பீவி படுகாயம் அடைந்தார். மேலும், வீட்டிற்குள் சென்ற அறிவழகன் கதவை தாழிட்டுக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயினத் பிவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.