விநாயகர் சிலை ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி!! வேட்டவலம் அருகே பரிதாபம்

 

வேட்டவலம் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள இசுக்கழி காட்டேரி கிராமத்தில் வசித்து வருபவர் பழனிவேல். இவரது மகன் திலீப் (12).  இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்ச்சி நடந்ததால் பள்ளிக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மதியம் திலீப் வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் மாலையில் ஊரில் விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது, ஒலி பெருக்கியை பயன்படுத்துவதற்கு வீடுகளில் மின்சாரம் எடுத்துள்ளனர். அந்த வகையில் ஒரு வீட்டில் இருந்து எடுத்து சென்றிருந்த மின்சார ஒயரில் இருந்து  திலீப் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கிவீசப்பட்டார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திலீப்பை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் திலீப் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த வெறையூர் போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் சிலை ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜபாளையம் அருகே விநாயகர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.