பள்ளி ஆசிரியர்களின் வருகை செயலியில் பதிவு! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

 

வருகிற 1-ம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகை செயலி மூலம் பதிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் வருகையினை இதுவரை பதிவேட்டில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நடைமுறையில் பள்ளிகல்வித்துறை அதிரடியாக மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டிருந்தது.

அதன்படி வருகிற 1-ம் தேதி முதல் ஆசிரியர்கள் தங்கள் வருகையினை பதிவேட்டிற்கு பதிலாக அரசு அங்கீகாரம் பெற்ற செயலியில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள்த தங்கள் வருகையினை பதிவு செய்துவிட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இந்த மாத இறுதிக்குள் பள்ளிகல்வித்துறை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவது இல்லை என்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் இருந்தும் எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த செயலி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.