மழை வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்.. மேக வெடிப்பு காரணமா? 

 

122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீர்காழியில் இந்த ஆண்டு அதிகபட்ச மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், 6 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளதாகவும், 16 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும், 108 இடங்களில் கனமழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்காழியில் 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இந்த மழைக்கு மேக வெடிப்பு ( Cloud Burst) காரணம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.