முன்னாள் காதலுடன் சேர்ந்து ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து கணவனை கொல்ல திட்டம்... வாட்ஸ்அப் ஷாட்-ஆல் சிக்கிய மனைவி!!

 

முன்னாள் காதலனுடன் சேர்ந்து ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து கணவனை கொல்ல மனைவி திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆழ்வார் கோயில் பகுதியில் வசித்து வந்தவர் வடிவேல் முருகன். கட்டிட தொழிலாளியான இவருக்கும் இறச்சகுளம் பகுதியை சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியர் திருமணத்திற்கு பின்பு இரண்டு மாதங்கள் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில்,  கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன் ஒருநாள் இரவில் திடீரென வீட்டில் நினைவிழந்து விழுந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினாலும் சில நாட்கள் கடந்த பின்பும் தனது உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு சரியாகவில்லை. இதற்கிடையே, கடந்த ஒரு மாத காலமாக சுஜாவின் செயல்பாட்டில் வடிவேல் முருகனுக்கு சந்தேகம் எழுந்ததுள்ளது. இதனால் மனைவியை கண்காணிக்க துவங்கியுள்ளார். 

ஏற்கனவே, திருமணமாகி சில நாட்களுக்கு பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது,  சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும் அவரோடு தற்போது எவ்வித தொடர்பும் இல்லை எனவும் சுஜா கூறியுள்ளார். இந்த நிலையில், மனைவியின் செல்போனில் முன்னாள் காதலனுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் மனைவியின் வாட்ஸ்ஆப் ஷாட்டில் முன்னாள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்ட பதிவுகள் இருந்துள்ளதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 

குறிப்பாக கணவருக்கு தரும் மருந்தை மாற்றி ஸ்லோ பாய்சன் கொடுத்து கணவன் இறப்புக்கு மருந்துதான் காரணம் என சொல்லிவிடலாம் என்று முன்னாள் காதலுடன் மனைவி பேசியதன் அடிப்படையில் இரணியல் காவல் நிலையத்தில் வடிவேல் முருகன் புகார் அளித்துள்ளார். அத்துடன் மனைவி மற்றும் அவரது முன்னாள் காதலனின் வாட்ஸ் ஆப் உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்டுகளையும் சமர்பித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சுஜா தன்னை வடிவேல் முருகன் தொல்லை கொடுத்து வந்த காரணத்தால் தனது மாத்திரையை அவரது மருந்துடன் சேர்த்து கொடுத்ததாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் என்று தான் இப்படி செய்யவில்லை எனவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி தனது காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த செய்திக்கு பின் அடுத்தடுத்து காதல் விவகாரங்களில் ஏற்படும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.