பெரம்பலூரில் கல்குவாரியில் விபத்து... 2 பேர் உடல் நசுங்கி பலி!! குவாரியை தற்காலிகமாக மூட கலெக்டர் உத்தரவு

 

பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து  விபத்தில் 2 தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் பகுதியில் உள்ள மலையில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் 100 பேருக்கும் அதிகமானோர் தினமும் வேலைபார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணிசெய்யும் போது பாறை சரிந்து விழுந்து, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சுப்பரமணி, வினோத் என்ற 2 தொழிலாளிகள் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் கவுள்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்த இருவரின் உடல்கள் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் மணி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பாறை சரிந்து விழுந்ததில் நமச்சிவாயம் என்பவர் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த கல்குவாரி பெரம்பலூர் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமானது என மருத்துவமனையில் இருந்த நபர் எஸ்.பியிடம் தெரிவிதத்தார்.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கல்குவாரி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தில் கனமவளத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.