சைவ ஓட்டலில் அசைவம்.. பீட்ரூட் பொரியலில் எலி தலை.. ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

 

பீட்ரூட் பொறியலில் எலி தலை இருந்துள்ளது, சாப்பிட போனவர்கள் இந்த எலி தலையை பார்த்து அலறியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் முரளி. இவரது உறவினர் சிலதினங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் இறப்பு சடங்குகளுக்கு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அனைவருக்கும் சாப்பாடு ஆர்டர் செய்ய ஆரணி பழைய பஸ் நிலையத்தை அடுத்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள சைவ உணவகத்தை நாடியுள்ளார்.

அவர்களும் ஆர்டர் கொடுத்த சாப்பாட்டை அந்த வீட்டுக்கு உணவை வாகனத்தில் அனுப்பி டோர் டெலிவரி செய்தனர். அதை இறப்பு நிகழ்ச்சியில் படையலிட்ட பின்னர், வந்திருந்தவர்களுக்கு பரிமாறப்பட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். பின்னர் மீதியிருந்த உணவுகளை வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது பீட்ரூட் பொரியலில் இறந்து போன எலியின் தலை ஒன்றின் துண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக இது குறித்து ஆர்டர் கொடுத்த ஓட்டல் உரிமையாளரிடம் முறையிட்டனர். ஆனால் இதனை ககண்டு கொள்ளாத அவர்கள் வீட்டிற்கு வந்து தாங்கள் வழங்கிய உணவை பார்வையிடாமல் தவிர்த்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த முரளி உடனடியாக இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் கு.வினாயகத்திடம் தெரிவித்தனர். பின்னர் எலி தலை கிடந்த பொரியலுடன் சம்பந்தப்பட்ட ஓட்டல் முன்பு அனைவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் தர்ணா போராட்டத்திலும்  ஈடுப்பட்டனர்.

இது குறித்து ஆரணி நகர போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் புகார் அளித்தனர். விரைந்து சென்ற போலீசார், தர்ணாவில் ஈடுப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களை ஓட்டலுக்கு வரவழைத்தனர். ஓட்டலுக்கு வந்த அதிகாரிகள், அங்கிருந்த உணவுகளில் சிலவற்றின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

பொது மக்களின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற தரமற்ற ஓட்டல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பொது மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.