பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய்... ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!!

 

கள்ளக்குறிச்சி அருகே பூச்சு மருந்து கொடுத்து மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் வசித்து வருபவர் ராமசாமி. இவரது மகன் சுப்ரமணியன் (28). இவரது மனைவி பரமேஸ்வரி (28). இந்த தம்பதியினருக்கு கரிஷ்னா (9), ஹரிணி (2) என்ற மகளும், பிரதீப் (7) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுவில் பரமேஸ்வரி கடன் பெற்று, மாத தவணை கட்டி வந்தார்.


இந்த நிலையில் அந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி மாத தவணை கட்ட கணவர் சுப்ரமணியிடம் பணம் தருமாறு பரமேஸ்வரி கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த பரமேஸ்வரி, தனது விளை நிலத்தில் வைத்திருந்த பருத்திக்கு அடிக்கும் மருந்தினை எடுத்து, தனது மகள் கரிஷ்னாவிற்கு, கொடுத்துவிட்டு, அவரும் குடித்தார்.


இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கரிஷ்னா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பரமேஸ்வரி உயிர் பிழைத்துக் கொண்டார். இது குறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், பரமேஸ்வரி மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 


இவ்வழக்கின் விசாரணை கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கீதாராணி, மகளை விஷம் கொடுத்து கொலை செய்த பரமேஸ்வரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும் 15 ஆயிரம் அபராதம், கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டார்.