2 பெண் குழந்தைகளுடன் இறந்து கிடந்த தாய்... மனதை உலுக்கிய கோர சம்பவம்!!

 

மங்களமேடு அருகே 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள பென்னகோணம் கிராமத்தில் வசித்து வந்தவர் கண்ணன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு வினோத்குமார், விஜயகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் வினோத்குமாருக்கு பிரியா என்ற மனைவியும், விஜயகுமாருக்கு ஜெயா என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நிகிதா, நிகிஷா என்ற 2 இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

வினோத்குமார் மற்றும் விஜயகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில, வினோத்குமார் தாய் தமிழ்ச்செல்வி, மனைவி பிரியா மற்றும் விஜயகுமாரின் மனைவி ஜெயா அவர்களது குழந்தை நிகிதா மற்றும் நிகிஷா ஆகியோர் பென்னகோணம் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த  சில மாதங்களாக கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஜெயா ஒரு வாரத்திற்கு முன்பு பென்னகோணம் கிராமத்திற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள அறையில் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்த ஜெயா குழந்தைகளுடன் காலையில் எழுந்து வெளியே எழுந்து வரவில்லை. இதனால்  சந்தேகமடைந்த வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஜெயா மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.

மேலும் 2 பெண் குழந்தைகளான நிகிதா (2) மற்றும் நிகிஷா (2) ஆகிய இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களமேடு போலீசார், 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்த பிறகு ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றாலும், ஜெயாவின் தந்தை செல்வராஜ் தனது மகளின் மாமியார் தமிழ்ச்செல்வி, மருமகனின் அண்ணன் வினோத்குமார் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி போலீசார் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.