பார்வையற்ற காதலர்களுக்கு திருமணம்... வடபழனி கோவிலில் நடத்தி வைத்த காவல்துறை!!

 

வடபழனி கோவிலில் பார்வையற்ற பட்டதாரி காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலு (32), ஆதரவற்ற பார்வை மாற்றுத்திறனாளி. முதுகலை பட்டம் பெற்றவர். கல்லூரியில் படிக்கும்போது, பார்வையற்ற தமிழரசியை காதலித்து வந்தார்.
தமிழரசியும் அதே கல்லூரியில் முதுகலை படித்தவர். நீண்ட காலமாக இவர்கள் காதலித்து வந்தனர். ஆனால், இவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க யாரும் முன்வரவில்லை.
இந்த நிலையில், இவர்களின் காதல் வாழ்க்கையை புரிந்துக்கொண்ட லயன்ஸ் கிளப் மற்றும் வடபழனி போலீசார், திருமணம் செய்து வைக்க முன் வந்தனர். அந்த வகையில் நேற்று காலை வடபழனி முருகன் கோவிலில் பாலு, தமிழரசிக்கு வெகு விமரிசையாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், வடபழனி போலீஸ் அதிகாரிகள் மற்றும் பார்வையற்ற நண்பர்கள் ஆகியோர் புதுமன தம்பதியை வாழ்த்தினர். மேலும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், சீர்வரிசை அளிக்கப்பட்டது.