சேர்ந்து வாழலாம்... சமாதானம் பேச வந்த கணவனை அடித்தே கொன்ற காதல் மனைவி!! சேலத்தில் நடந்த கொடூரம்

 

சங்ககிரி அருகே குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த அழைத்த காதல் கணவனை கல்லால் தாக்கி கொலை செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் மோரூர் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட தாசநாயக்கன்பாளையம் அருந்ததியர் பகுதியில் வசித்து வந்தவர் தனபால்(44). இவர் தனியார் நூற்பாலை சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரிதா (38) என்பவரை காதலித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜெயஸ்ரீ (20) என்ற மகளும், நித்திஷ்குமார் (18) என்ற மகனும் உள்ளனர். 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சரிதா தனது குழந்தைகளுடன் அவருடைய தாயார் வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ. 20) இரவு தனபால் தனது மனைவி சரிதாவை சமாதானம் பேசி, குடும்பம் நடத்த அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி சரிதா, மைத்துனர் சரவணன் (44), மாமனார் குமாரசாமி (68), மாமியார் ராஜம்மாள் (68) ஆகிய 4 பேரும் தனபாலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மயங்கி கீழே விழுந்த தனபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த தனபாலின் பெற்றோர்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்த  சங்ககிரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.