நாங்கள் பணம் தருவது இருக்கட்டும்.. எங்களுக்கு மாமூல் தாருங்கள் கேட்டு இந்து முன்னணி நிர்வாகிகள் ரகளை!!

 

உளுந்தூர்பேட்டை அருகே சாப்பிட்ட உணவுக்கு பணம் தர மறத்து இந்து முன்னணி நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. கடந்த 2-ம் தேதி இரவு இந்த உணவகத்திற்கு மூன்று பேர் உணவருந்த வந்தவர்கள், விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து ரசித்து, ருசித்து சாப்பிட்டுள்ளனர்.

அனைத்தையும் சாப்பிட்டு முடித்ததும் அவர்களிடம் ஓட்டல் ஊழியர் பில்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த மூவரும், ‘ஓட்டலில் சாப்பாடு எதுவும் சரியில்லை; அப்படியிருக்கும் போது உங்களுக்கு பணம் வேறு தர வேண்டுமா?’ என கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள், ‘உங்களுக்கு சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே சொல்லி இருக்கலாமே; அனைத்தையும் சாப்பிட்டு முடித்துவிட்டு இப்படி சொன்னால் என்ன அர்த்தம்’ எனக் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த மூவரும், ‘சாப்பிட்டதற்கு நாங்கள் பணம் தருவது இருக்கட்டும். முதலில் நீங்கள் எங்களுக்கு மாமூல் தாருங்கள்’ எனக் கேட்டுள்ளனர். ஓட்டல் ஊழியர் மாமூல் தர மறுத்தததால் அங்கு அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் கொடுத்த புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் கலவரத்தில் ஈடுப்பட்ட மூவரையும் காவல் நிலைத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் இந்து முன்னணி அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் அஜய் மற்றும் மோகன் என்று தெரிவந்துள்ளது. மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.