சென்னையில் ஜல்லிக்கட்டு... அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!!

 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ம் தேதி தலைநகர் சென்னையில் முதல் முறையாக நடக்கிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. 
கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த தடையை உடைத்து ஒரு வழியாக மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. தற்போது வழக்கம் போல ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை சென்னையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்த உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்-அமைச்சர் பெயரில் ஒரு காளை உள்பட சிறந்த 501 காளைகள் இடம் பெற உள்ளன.
தமிழ்நாட்டிலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ஜல்லி்க்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கான பணிகள் தொடங்கி விட்டது. இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும் என்று கூறினார்.