ப்ரீ பயரா? பெற்றோரா? என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!

 

ஆன்லைன் விளையாட்டு விளையாடியதை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் அரவிந்தா நகரில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகன் பாலகுமார் (18). இவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த பாலகுமார் எந்நேரமும் செல்போனில் ‘பிரீ பயர்’ என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார்.

இதனைக் கண்ட அவரது தாய் அம்பிகா அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பாலகுமார் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டின் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாத்தா வெள்ளையன் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் பாலகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பாலகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பிரீ பயர் விளையாடியதை அவரது குடும்பத்தினர் கண்டித்ததால் தூக்குப்போட்டுக் கொண்ட பாலகுமாரை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.