வடிவேல் பட பாணியில்... டாஸ்மாக் கடையில் ஆட்டைய போட வந்தபோது போலீசில் சிக்கிய மதுபிரியர்கள்!!

 

கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் ஓட்டை போட்டு புகுந்து சாவகாசமாக சரக்கடித்த மதுப்பிரியர்களை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்த வீடியோ வலைத்தளங்களில் வலம் வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே தண்டலச்சேரி பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அந்த பகுதியை சுற்றியுள்ள மதுப்பிரியர்கள் மதுபானங்கள் வாங்கி குடிப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு தண்டலச்சேரி டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் மற்றும் காசாளர் ஆகியோர் விற்பனை முடிந்து கணக்கு வழக்குகளை பார்த்த பிறகு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

அதனை நோட்டமிட்டிருந்த கும்பல் ஒன்று கடையின் சுவற்றை துளையிட்டு உள்ளே புகுந்து மதுபானங்களை மூட்டைக் கட்டியுள்ளது. சரக்கு திருட வந்த கும்பல் அதனை கடைக்குள்ளேயே அமர்ந்து ஜாலியாக குடிக்கவும் செய்துள்ளனர்.

அப்பகுதியில் ரோந்து வந்த போலீசார் டாஸ்மாக் சுவரில் துளை இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர். துவாரத்தின் வழியாக டார்ச் லைட் அடித்து பார்த்தபோது உள்ளே குடிமகன்கள் அமர்ந்திருந்தது தெரிந்துள்ளது.


அவர்களை வெளியேற்றிய போலீசார் அவர்களை விசாரித்தபோது திருடுவதற்காக உள்ளே புகுந்ததையும், மதுவை கண்டதும் அமர்ந்து மது அருந்தியதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். சென்னையை சேர்ந்த சதீஷ், மற்றொருவர் விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரியவந்தது. அவர்கள் டாஸ்மாக்கில் திருடிய 18 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றிய போலீஸார் அவர்களை கைது செய்தனர்.