‘நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’ மனைவிக்கு வாட்ஸ்அப்பில் தகவல்... கணவர் தூக்கிட்டு தற்கொலை!!

 

மனைவிக்கு செல்போனில் தகவல் அனுப்பி விட்டு விடுதி அறையில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம், பாபா நகரைச் சேர்ந்தவர் கணேசன் (38). முதல் மனைவியை விவாகரத்து செய்த கணேசன், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொளத்தூரில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். இதற்கிடையில் 2-வது மனைவியின் நடத்தையில் கணேசன் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதுள்ளது. இதனால் கணேசன், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது மனைவியையும் விட்டு பிரிந்து அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெருவில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் தனது நண்பர்களுடன் அயனாவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. நண்பர்கள் அனைவரும் சென்றவுடன் கணேசன், “நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்” என சுதாவுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பினார். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுதா, உடனடியாக கணேசனை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனடியாக சுதா, அந்த விடுதிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்கள் உதவியுடன் கணேசன் தங்கி இருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். 

அங்கு போர்வையால் கணேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அயனாவரம் போலீசார், தூக்கில் தொங்கிய கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்திவு செய்து கணேசன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.