குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்... டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

அக்டோபர் 30-ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முதல்நிலைத் தேர்வானது, 19.11.2022 அன்று முற்பகல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி இந்தாண்டு குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியிட்டது.

துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 இடங்களில் என உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 92 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

முதல் நிலைத்தேர்வு ( Prelims), முதன்மைத் தேர்வு (Mains) மற்றும் நேர்காணல் (Interview) ஆகிய 3 கட்டங்களில் தேர்வு நடைபெறும் என்றும், முதல்நிலைத் தேர்வு இம்மாத இறுதியில்   (செப்டம்பர் 30) நடைபெறும் என்றும்  அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களினால்  முதல்நிலைத் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், “30.10.2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முதல்நிலைத் தேர்வானது, நிர்வாகக் காரணங்களுக்காக 19.11.2022 அன்று முற்பகல் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளது.