நாளை முதல் ரேஷன் கார்டுக்கு ரூ. 1,000... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

மழையினால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000, நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த வாரம் கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. 

இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. 

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் ஆய்வு செய்த பிறகு, மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதல்வர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1,000 வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, நாளை (நவ. 24) முதல் ரேஷன் கடைகளில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.