ஜனவரி 10-ம் தேதிக்குள் இலவச வேட்டி- சேலை! 15 வெரைட்டிகளில் வழங்கும் தமிழ்நாடு அரசு!!

 

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு இலவச வேட்டி சேலைகளை புதிய டிசைனில் வழங்க முடிவு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கடந்த பொங்கல் பண்டிகைக்கு 14 இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த முறை பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி சேலை விநியோகம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

2023-ம் ஆண்டுக்கான வேட்டி, சேலை உற்பத்திக்காக முதல் தவணையாக ரூ.243.96 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வில்லையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது என்றும் இந்த திட்டத்தை ஜனவரி 10-ம் தேதிக்குள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி சேலைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 டிசைன்களில் மற்றும் பல நிறங்களில் சேலையும் 5 டிசைன்களில் வேட்டியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு பரிசு குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.