முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா காலமானார்! தலைவர்கள் இரங்கல்

 

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடபட்டி முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76.

எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்த சேடபட்டி முத்தையா, 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் சேடப்பட்டி தொகுதியில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். சேடபட்டி செல்லப்பிள்ளை என்று தொகுதி மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்.

எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. கடந்த 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தபோது சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா பதவி வகித்தார்.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் எம்.பியாகவும் வெற்றி பெற்று கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். காலப்போக்கில் இவர் அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டார். இதையடுத்து அங்கிருந்து விலகி கடந்த 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். மதுரை திருமங்கலத்தில் வசித்து வந்த சேடபட்டி முத்தையாவிற்கு கடந்த சில வாரங்களாகவே உடல் குறைவு ஏற்பட்டது.

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்த முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சேடப்பட்டி முத்தையாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சேடபட்டி முத்தையா உடல் நலக்குறைவினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். சேடபட்டி முத்தையா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.