மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு...  தொடக்கக் கல்வித்துறை உத்தரவு!

 

தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ்,1  முதல் 5 ம்  வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். இரண்டு ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டதால் பல மாணவர்களுக்கு எழுத்துக்கள் மறந்து விட்டன. கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

1 மற்றும் 2-ம் வகுப்புகள் படிக்காமலேயே தேர்ச்சி பெற்று 3-ம் வகுப்புக்கு சென்ற மாணவர்கள் இருக்கின்றனர். எனவே 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிலையில், தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ்,1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கொரோனோ காலத்தில் கற்றல் வாய்ப்புகளை இழந்ததால், அதனை ஈடு கட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை, இந்த தேர்வை நடத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.