மாணவிகள் பாலியல் புகார்.. போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியை..! மன உளைச்சலால் விபரீத முடிவு!!

 

பாலியல் புகாரில் போக்சோ சட்டத்தில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியை, அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மண்ணச்சநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் கண்ணாடி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி லில்லி (32). இவர் உப்பிலியபுரம் அருகே உள்ள நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் இந்த பள்ளியில் வேலைபார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் மோகன் தாஸ் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக மாணவிகள் சிலர் ஆசிரியை லில்லியிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் லில்லி அதனை பெரிதாக கண்டுகொள்ளாமலும், ஆசிரியரை கண்டிக்காமலும் இருந்ததாக கூறப்படுகின்றது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் ஆசிரியர் மோகன் தாஸ் செய்த அத்துமீறல் உறுதி செய்யப்பட்டு அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆசிரியை லில்லி மாணவிகள் தெரிவித்த புகாரை அலட்சியப்படுத்தியதால் போக்சோ வழக்கில் 2 வது குற்றவாளியாக லில்லியை போலீசார் சேர்த்ததாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியை லில்லியை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்தனர். இதனால், மனஉளைச்சலில் இருந்த லில்லி நேற்று முன்தினம் மண்ணச்சநல்லூர் சீதாலட்சுமி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் காவல் நிலைத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் லில்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிக்கு பொறுப்பாக தலைமை ஆசிரியர் இருக்க அவரை விட்டு தனது மனைவி மீது ஒரு தலைபட்சமாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், பள்ளியில் கொடுக்கப்பட்ட அழுத்தமே தனது மனைவியின் உயிரிழப்புக்கு காரணம் என்று அவரது கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.