செம்பரம்பாக்கம் ஏரியில் உச்சகட்ட விபரீதம்! நீரில் மூழ்கி ப்ளஸ் 2 மாணவன் பலி!!

 

செம்பரம்பாக்கம் ஏரியில் நீச்சல் தெரியாத மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

சென்னை குன்றத்தூர் நால்ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெகதீசன் (17).  இவர் கோவூர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 5 மணியளவில் தனது நண்பர்களான சூர்யா மற்றும் யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் ஏரிக்கரையில் உள்ள படியில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார். அவரது நண்பர் சூர்யா நீச்சல் அடித்தபடி குளித்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் சூர்யா, ஜெகதீசனை நீச்சல் அடிக்கும்படி ஏரியில் இறக்கியுள்ளார். அப்போது நீச்சல் தெரியாத ஜெகதீசன் எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கினார். அவரை மீட்க சூர்யா போராடிய போது அவரால் ஜெகதீசனை மீட்க முடியவில்லை. இதையடுத்து உடனடியாக குன்றத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய ஜெகதீசனை தீவிரமாக தேடினர். ஆனால் சில மணி நேரங்களுக்கு பின்பு இறந்த நிலையில் ஜெகதீசன் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது நீச்சல் தெரியாமல் ஏரியில் மூழ்கி ஜெகதீசன் இறந்து போன பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.