மதுரை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் கருகி பலி!

 

மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிந்துபட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பட்டாசு ஆலையில் பற்றிய  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலையின் 2 வெடி மருந்து கிடங்குகளில் இருந்த பணியாளர்கள் 5 பேரும் விபத்தில் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் வடக்கன்பட்டியை சேர்ந்த வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா உள்பட 5 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.