பயணிகளிடம் அலட்சியமாக நடக்க வேண்டம்.. அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கு அதிரடி உத்தரவு!!

 

ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியின் போது பயணிகளிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயணித்து வருகிறார்கள். தொழிலாளர்கள், சிறு குறு வியாபாரிகள், மாணவ மாணவிகள், பெண்கள், அலுவல் பணியாளர்கள், நோயாளிகள் என பல தரப்பினர் பேருந்துகளில் சென்று வருகின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் பயணிகளை அரசு பேருந்தின் சில ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மரியாதை குறைவாக பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் இந்த பிரச்சனை அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சென்னை போக்குவரத்துக் கழகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், வேறு வழித்தடங்கள் மற்றும் சாலைகளில் மாநகர பேருந்துகளை இயக்கக்கூடாது என்று நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி இருக்கிறது. பேருந்து நிலையத்திலேயே பயணிகளை இறக்கி விட வேண்டும் என்றும், அதற்கு முன்பாக நிறுத்தி இறக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கு ஏற்ப உரிய சுமைக் கட்டண பயண சீட்டை நடத்துநர்கள் வழங்க வேண்டும் என்றும், பயணிகளுடன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அலட்சியமாக நடப்பதை முழுவதுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

பணியின்போது வீணான வார்த்தைகளை, தவறாக பேசுவது, கைக்கலப்பில் ஈடுபடக்கூடாது என்றும், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பல்வேறு ஒழுங்கீனங்களில் ஈடுபடுவதால் வருவாய் இழப்பு மற்றும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுவதாக சென்னை போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.