ரீல்ஸ் லைக்ஸ்களால் சினிமாவில் நடிக்க ஆசை... கணவனால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

 

திருப்பூரில் ரீல்ஸ், இன்ஸ்டா மோகம். சினிமாவை தேடி சென்னைக்கு சென்ற மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வசித்து வருபவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அமிர்தலிங்கம் தனது மனைவி மகள்களுடன் திருப்பூர் செல்லம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் தென்னம் பாளையம் காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக அமிர்தலிங்கம் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சித்ரா டிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் என கூறப்படுகிறது. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் ரீல்ஸ், இன்ஸ்டா என அதிலேயே தனது நேரத்தை அதிக அளவில் செலவழித்துள்ளார். இதில் அதிக ஃபாலோயர்கள் கிடைத்த நிலையில் அதன் மூலம் கிடைத்த சினிமா நண்பர்கள் உதவியுடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்ரா தனியாக சென்னையில் குடியேறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சித்ரா சென்னையில் இருந்து திருப்பூருக்கு திரும்பி வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தகராறு நடந்துள்ளது. இதனால் சித்ரா கோபித்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் அவர்களது மகள்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். இதன் பின்னர் சித்ராவை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே நேற்று காலை நீண்ட நேரமாக அவர்களது வீட்டு கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, கழுத்தில் காயங்களுடன் சித்ரா சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திய காவல் நிலைய போலீசார், சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அமிர்தலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கழுத்தில் காயம் இருப்பதால், துப்பட்டா அல்லது சேலை போன்றவற்றால் அமிர்தலிங்கம் கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இறப்புக்கான காரணம் இதுவரை உறுதியாகவில்லை என சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.