பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

 

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிந்துபட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பட்டாசு ஆலையில் பற்றிய  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலையின் 2 வெடி மருந்து கிடங்குகளில் இருந்த பணியாளர்கள் 5 பேரும் விபத்தில் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் வடக்கன்பட்டியை சேர்ந்த வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா உள்பட 5 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.