தொடர் கனமழை.. இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

 

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு பகுதிகளில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

அதன்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூன்றாம் நாளாக நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.