ரயிலில் முன்பு பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை!! செங்கல்பட்டு அருகே நடந்த சோகம்

 

செங்கல்பட்டு அருகே நர்சிங் மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளியான இவருக்கு நிரோஷா (20) என்கிற மகள் உள்ளார். இவர் பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நாள்தோறும் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து கல்லூரிக்கு மின்சார ரயிலில் வழக்கமாக சென்று வந்துள்ளார். இந்த நிலையில், வழக்கம் போல கல்லூரி செல்ல சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்துக்கு நிரோஷா வந்துள்ளார்.

பின்னர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், நிரோஷா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிரோஷாவின் பையில் தற்கொலைக்கான கடிதம் இருந்ததாக கூறப்படும் நிலையில் அதனை கைப்பற்றிய ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நர்சிங் மாணவி ரயிலில் இருந்து குதித்து   தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.