சோகம்! தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனை..! 9-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து பலி!!

 

அணைக்கட்டு அருகே தலைமை ஆசிரியர் அளித்த தண்டனையால் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் வசித்து வருபவர் டெய்லர் குப்பன். இவரது மனைவி லாவண்யா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் மோகன்ராஜ் (13), அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அவர்களது 2வது மகனும் இதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று மாலை 9-ம் வகுப்பு இ பிரிவு மாணவர்கள் சத்தமிட்டு பேசி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதையறிந்த தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், அந்த மாணவர்களை பள்ளி முழுவதும் 4 சுற்று ஓடி வரும்படி தண்டைனை விதித்துள்ளார். அதன்படி 40 பேரும் 4 சுற்றுகள் ஓடியுள்ளனர். 

இதில் மாணவன் மோகன்ராஜ் இரண்டு ரவுண்டு ஓடியதுமே மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ந ஆசிரியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து பெற்றோருக்கு தகவல் அளித்து வரவழைத்தனர். அவர்களிடம் மயக்கம் வருவதாக மோகன்ராஜ் கூறியதை அடுத்து, அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கும்போது திடீரென வலிப்பு, மாரடைப்பு ஏற்பட்டு மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்து கதறி அழுத பெற்றோர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலேயே மாணவனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்ததும், அணைக்கட்டு போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மாணவன் உடலைக் கேட்டு வீட்டுக்குச் சென்றனர். பிரேதத்தை தர மறுத்த குடும்பத்தினர், தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால், அந்த தரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.