பள்ளியில் மாணவர்களிடையே மோதல்... மோதிக்கொண்ட இரு கிராம மக்கள்!!

 

பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு இரு கிராமங்களிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் விளையாட்டு வகுப்பின் போது மாணவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது இரு கிராம மாணவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் மாணவர்கள் இரு பிரிவினராக பிரிந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த தகவல் வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வேலங்காடு கிராமத்தை சேர்ந்த சிலர் இரும்பு  மற்றும் உருட்டு கட்டையுடன் கயப்பாக்கம் கிராமத்திற்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தாக்கினர். இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டதில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த கயப்பாக்கம் கிராமத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் சாய்க்கப்பட்டது.

பின்னர் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் இரண்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இரு குழுவாக இவர்கள் தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் மாணவ மாணவிகள் பெரியவர்கள் என அனைவரும் இந்த தாக்குதலில் இறங்கி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த வீடியோவை வைத்து தற்பொழுது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.