கடலுக்குள் 60 அடி ஆழத்தில் நடைபெற்ற செஸ் போட்டி!! வைரலாகும் வீடியோ

 

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடையும். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி இந்த போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகள் பங்கேற்பதுடன் 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு தரப்பினர் பல வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விளையாட்டு வீரர்களுக்கு புதுமையான முறையில் வரவேற்பும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். செஸ் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கும் செஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டங்களின் ஒரு அம்சமாக சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் கடலுக்கு அடியில் செஸ் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில் சென்னை காரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் கடலில் நீந்துவதற்கு பயிற்சி அளிக்கும் அரவிந்த் ஸ்குபா நிறுவனத்தின் எஸ்.பி.அரவிந்த் தருண் ஸ்ரீ மற்றும் சிலர், சென்னை நீலாங்கரை கடற்கரையில் தம்பி உடை அணிந்து கடலுக்குள் 60 அடி ஆழத்தில் சென்று செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நம்ம சென்னை போஸ்டரும் வைத்திருந்தனர்.


செஸ் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடலுக்குள் செஸ் விளையாட்டு போட்டி சென்னையில் முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் திருமணம், கடலுக்கு அடியில் பிறந்த நாள் கொண்டாட்டம், என நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் வரிசையில் தற்போது கடலுக்கு அடியில் ஒரு  சதுரங்க போட்டியே நடைபெற்று முடிந்துள்ளது