தவறுதலாக குத்தியதால் தங்கை கணவர் கொலை... குற்ற உணர்ச்சியில் மைத்துனர் தற்கொலை!!

 

தங்கை கணவரை தவறுதலாக கத்தியால் குத்தியதில் நடந்த கொலை, குற்ற உணர்ச்சியில் மைத்துனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் கிராமச்சாவடி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (29). அவரது தம்பி சங்கர் (27). கட்டிடத் தொழிலாளிகளான சிவக்குமார் சங்கர் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறில் அண்ணன் சிவக்குமாரை அவரது தம்பி சங்கர் கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்தபோது அதை தடுக்க வந்த சங்கரின் தங்கை கணவர் காளிராஜ் (32) மீது கத்திக்குத்து விழுந்தது.

இதில் படுகாயமடைந்த காளிராஜை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த மைத்துனர் சங்கர், தங்கையின் கணவரை கத்தியால் குத்தி கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கம்பம் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணன் தம்பி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தங்கையின் கணவரை தவறுதலாக கத்தியால் குத்தியதில் நடந்த கொலை, அதற்காக மனமுடைந்து நடந்த தற்கொலை நிகழ்வு கம்பம் நகரில் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.