நெகிழ்ச்சி! மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன்: உடல் உறுப்புகள் தானம்

 

குடியாத்தம் அருகே மின்னல் வேகத்தில் வந்த பைக் மோதி மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் உடல் உறுப்புகள் தானம் செய்ய பெற்றோர்கள் முன் வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன்புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். பெயிண்டரான இவருக்கு சுதீஷ்(11), கோகுல், ரோகித் என மூன்று மகன்கள் உள்னர். மூத்த மகன் சுதீஷ் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் தந்தையுடன் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக குடியான் குப்பம் மெயின் ரோட்டில் சுதீஷ் இன்று நின்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த பைக் சுதீஷ் மீது மோதியது. இதில் சுதீஷீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய சுதீஷீன் பெற்றோர் முன் வந்தனர். அதன்படி சுதீஷீன் இதயம், கல்லீரல், கிட்னி, கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டு வேலூர் சிஎம்சி மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சுதிஷீன் பெற்றோரின் முடிவு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர்.