பகீர் சம்பவம்! தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொடூர கொலை!! 2வது கணவர் கைது!

 

சென்னையில் குடும்ப தகராறில் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவியை 2வது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கெங்கை நகர், கள்ளிகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் பவித்ரா (28). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடமாக முதல் கணவா் ரெஜிஷை விட்டு பிரிந்து அவரது தாய் வீடான புழல் கதிா்வேடு பகுதியில் வசித்து வந்த நிலையில், வீட்டின் அருகில் மனைவியை இழந்து வசித்து வந்த ராஜா (35) என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், பவித்ரா- ராஜா இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெரியபாளையம், அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். 

பின்னர், இந்த தம்பதி விழுப்புரத்தில் தங்கி அங்கு ஒரு துணி கடையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அம்பத்தூர், கள்ளிக்குப்பத்துக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்தனர். கடந்த ஒரு வாரமாக பவித்ரா - ராஜாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த பவித்ராவின் தாய் அமுதா வீட்டுக்கு வந்து, அவரை சமாதானம் செய்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பவித்ரா வீட்டில் சண்டை நடப்பதாக அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரோந்து பணியில் இருந்த ஆய்வாளர் ரமணி சம்பவ இடத்திற்கு சென்ற போது பவித்ரா சடலமாக கிடந்தார். அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராமசாமி, உதவி ஆய்வாளர் முபாரக் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பவித்ரா தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், அவரது 2வது கணவர் ராஜா மாயமாகி இருந்த நிலையில் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் பவித்ராவின் தற்கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் அவருடைய செல்போன் எண்ணை வைத்து தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நள்ளிரவில் ராஜா அம்பத்தூரில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.