மாணவர்கள் கவனத்திற்கு..! செப்டம்பர் 15 முதல் துணைத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்

 

பொதுத்தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவர்கள் செப்டம்பர் 15ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2021-2022 ம் கல்வியாண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மே 2 முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 6.49 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்தது.

இதில் 12-ம் வகுப்பில் மட்டும் மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள மாணவர்களில் சிலர் தேர்வில் பங்கேற்கவில்லை சிலர் தேர்ச்சி பெறவில்லை.

இதனையடுத்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித்தேர்வு மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.