‘துணிவு’ படம் ஓடும் திரையரங்கிற்குள் திடீரென புகுந்த போதை ஆசாமி.. ஒரு காட்டு காட்டிய ரசிகர்கள்!

 

சங்கரன்கோவிலில் உள்ள திரையரங்கில் மது போதையில் வந்த ஆசாமி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரையரங்கில் நேற்று முன்தினம் அஜித்தின் ‘துணிவு’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திரையரங்கிற்குள் நுழைந்த போதை ஆசாமி ஒருவர், திடீரென அங்கிருந்த வாகனங்களை கீழே தள்ளிவிட துவங்கினார்.

இதனைக் கண்ட அங்கிருந்த பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமி திடீரென பணியாளர்களை சரமாரியாக தாக்கத் துவங்கினார். அதன் பின்பு திரையரங்கிற்கு உள்ளே நுழைந்து அங்கிருந்த சேர்களை தரையில் அடித்து உடைத்தார். தொடர்ந்து ஒரு மணி நேரமாக அப்பகுதியில் ரகளை ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனைக் கண்ட படம் பார்க்க வந்த ரசிகர்கள் அவரை அடித்து உதைத்து கயிறு கொண்டு கட்டி வைத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.விசாரணையில் அவர் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ம் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். திடீரென திரையரங்குக்குள் நுழைந்து மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.