மின்கட்டண உயர்வு - அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக ஆர்ப்பாட்டம்

 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்து ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 18-ம் தேதி மின்கட்டணம் உயர்வு பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து 25.7.2022 அன்று அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

அதன்படி, மின்கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். 

இந்த ஆர்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை பெரும் அளவில் திரள்வார்கள் என்று கூறப்படுகிறது. செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரையில் அதிமுகவினர் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.