நார் மில் மிஷினில் சிக்கி பலியான பிஞ்சு குழந்தை... தாயின் கண்முன்னே நேர்ந்த கொடூரம்!!

 

நாமக்கல் அருகே நார் மில்லில் தாய் கண்ணெதிரே மிஷினில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஒலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தேங்காய் நார் மில் வைத்து நடத்தி வருகிறார். இவரது நார் மில்லில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாரம் மற்றும் அவரது மனைவி  மனிஷாதேவி இருவரும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தீஷ்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், மனிஷாதேவி தனது குழந்தை தீஷ்குமாரை மடியில் வைத்து கொண்டே தேங்காய் நார் மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தீஷ்குமார்  ஓடிக்கொண்டிருக்கும் மிஷனின்  பெல்ட்டை பிடித்துள்ளார். அப்போது திடீரென குழந்தை மிஷினுக்குள் இழுத்து சென்றது. இதில் தாயின் கண்ணெதிரே குழந்தை தீஷ்குமார் மிஷினில் சிக்கி உடல் நசுங்கியது.

உடனடியாக அருகில் இருந்த அவரது தாய் மனிஷாதேவி மிஷினை நிறுத்தி குழந்தை தீஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். அப்போது குழந்தை தீஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் கண்ணெதிரே குழந்தை மிஷினில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.