பள்ளி வளாகத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு... விழுப்புரம் அருகே பகீர் சம்பவம்!!

 

விழுப்புரம் அருகே பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நடராஜன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அவரது மூத்த சகோதரரான ஸ்டாலின் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு சென்ற ஸ்டாலின், தனது தம்பி நடராஜனை அழைத்து சொத்து சம்மந்தமாக பேசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆந்திரமடைந்த ஸ்டாலின்  திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது தம்பியான ஆசிரியர் நடராஜனை சரமாரியாக வெட்டியுள்ளார். பள்ளி வளாகத்தில் ஆசிரியர் நடராஜனை ஒருவர் அரிவாளால் வெட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மாணவர்கள் சிலர் ஓடி சென்று தடுத்துள்ளனர்.

இதில் 11-ம் வகுப்பு மாணவர்களான மனோஜ், ஆகாஷ், முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்று சேர்ந்து ஸ்டாலினை பிடித்து வைத்து கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த ஆசிரியர் நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளவனூர் போலீசார், ஆசிரியர் நடராஜனை அரிவாளால் வெட்டிய அவரது அண்ணன் ஸ்டாலினை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.