பகலில் குப்பை பொறுக்குவதுபோல வீடுகளுக்கு ஸ்கெட்ச்... இரவில் கொள்ளை அடிக்கும் இளைஞர்... பகீர் வாக்குமூலம்!

 

பகலில் குப்பை பொறுக்கிக்கொண்டே இரவில் கொள்ளையராக இருந்துவந்த நபரை தஞ்சாவூர் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அருகே பேங்க் ஸ்டாப் காலனியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 9-ம் தேதி வீட்டின் பின்புற கதவை உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது கண்காணிப்பு கேமராவில் குப்பை பொறுக்கும் ஒரு நபர் சந்தேகத்திற்கு இடமாக அங்கும் இங்கும் செல்வதை அறிந்த போலீசார், அவர் குறித்த தகவல்களை சேகரித்தனர்.

தகவலின் அடிப்படையில் அவர் சின்ன சிவா என்கிற சிவா என்பதும் அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரை பிடிக்க தஞ்சை தமிழ் பல்கலைகழக போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடி வந்த நிலையில், தற்போது சிவாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பகலில் குப்பை பொறுக்குவது போல் நடித்து, யாரும் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பதாக சிவா தெரிவித்துள்ளார்.