மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி!! திருத்தணி அருகே சோகம்

 

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்து உள்ள சிறுகுமி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக சிறுகுமி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நாகையம்மன் நகரை சேர்ந்த அன்பு என்பவரது மகன் குட்டி ( 22) என்பதும் இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் குட்டி தனது தந்தை அன்புவிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டு பள்ளிப்பட்டில் உள்ள தனது பாட்டி வள்ளியம்மாவை பார்ப்பதற்கு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிள் திருத்தணி அடுத்த சிறுகுமி அருகே செல்லும்போது சாலை வளைவில் எதிர்பாராத விதமாக ஓரத்தில் இருந்த கல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குட்டி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.