பள்ளிக்குச் சென்ற ப்ளஸ்-2 மாணவி ஏரியில் இருந்து சடலமாக மீட்பு!! கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

 

பர்கூர் அருகே பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற ப்ளஸ்-2 மாணவி மர்மமான முறையில் ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மோடிகுப்பம் அருகே உள்ள கீழ்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி தேவராஜ். இவரது மனைவி சங்கீதா. இவர்களின் மகள் பார்கவி (வயது 17). இவர் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் மாலை வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் மகளை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் பள்ளிக்கு சென்று வகுப்பு ஆசிரியரிடம் கேட்டனர். அப்போது மாணவி பார்கவி பள்ளிக்கு வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஐகுந்தம் பெரிய ஏரி பகுதியில் நேற்று பிற்பகல் சீருடை அணிந்த நிலையில் ஒரு மாணவி சடலம் மிதந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் பர்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் இருந்து மாணவியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர், காணாமல் போன மாணவி பார்கவி என்பதும், பள்ளி சீருடையில் புத்தக பையுடன் மாணவியின் உடல் ஏரியில் பிணமாக மிதந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பதறி அடித்தபடி ஏரிக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி பள்ளி செல்லாத நிலையில் எப்படி ஏரியில் சடலமாக மிதந்தார். ஏரி பக்கமாக நடந்து சென்ற போது மாணவி தவறி விழுந்தாரா? அல்லது தண்ணீரில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.