பள்ளத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி! உசிலம்பட்டி அருகே சோகம்

 

உசிலம்பட்டி அருகே மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் ஒன்றரை வயது குழந்தை விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்னச்செம்மேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஈஸ்வரன். ஜேசிபி டிரைவரான இவருக்கு வள்ளிமீனா என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், வள்ளிமீனா தனது ஒன்றரை வயதான கவின்சாரதியை சின்னச்செம்பட்டியில் உள்ள பாட்டி முருகாயிடம் விட்டுவிட்டு, முதல் குழந்தையுடன் தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பாட்டி முருகாயியின் வீட்டு அருகே இருந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. அப்போது வெளியே விளையாட சென்ற கவின்சாரதி, அங்கிருந்த சோற்றில் வழுக்கி எதிர்பாரத விதமாக பள்ளத்தில் விழுந்து நீரில் முழ்கி பலியானான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தப்பநாயக்கணூர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தையின் இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.