10 வயது மகளை கொன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!! திருப்பூர் அருகே நடந்த சோகம்

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜர் நகரில் வசித்து வந்தவர் காளிதாஸ் (28). பொள்ளாச்சி சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான இவருக்கு பூங்கொடி (25) என்ற மனைவியும், வர்ஷா என்ற 10 வயது மகளும் இருந்தனர். இருவரும் பூங்கொடியின் தாய் வீட்டில் வறுமையில் வசித்துள்ளனர்.

பூங்கொடி தாராபுரத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மகள் வர்ஷா அலங்கியம் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருந்த பூங்கொடி கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் குடும்பம் வறுமையில் வாடி இருக்கிறது.

இந்நிலையில் நேற்று குரூப் 4 தேர்வை எழுதிய பூங்கொடி, இன்று காலை திடீரென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி வர்ஷாவை தூக்கில் தொங்க விட்டு கொலை செய்தார். பின்னர் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டிற்கு வந்த பூங்கொடியின் தாய் சரஸ்வதி, மகளும், பேத்தியும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து அழுது கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த அலங்கியம் போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக மகளை கொன்ற தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.