வலங்கைமான் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சுவரில் அடித்து கொன்ற தாய்!!

 

வலங்கைமான் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தாயே சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வேடம்பூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ரேணுகா (33), ரேகா (30), மணிகண்டன் (20), சினேகா (18) உள்ளிட்ட மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், ரேணுகாவிற்கு நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முத்து எண்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதனால் ரேணுகா தனது 3 பிள்ளைகளுடன் வேடம்பூரில் உள்ள வீட்டில் தாய்- தந்தையுடன் வசித்து வந்தார். அவர் அங்கிருந்து குடவாசலில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்றார். அப்போது அதே கடையில் வேலைபார்க்கும் கமலேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இதில் ரேணுகா கர்ப்பம் அடைந்து கடந்த 22-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பச்சிளம் குழந்தையை ரேணுகா, அவரது தாயார் ரேவதி ஆகியோர் சேர்ந்து வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் புதைத்துள்ளதாக வலங்கைமான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு ரேணுகா, ரேவதி இல்லாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை தேடி வந்தனர்.

இதற்கிடையே தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரேணுகா, ரேவதியை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரேணுகா கணவரை விட்டு பிரிந்த நிலையில் தன்னுடன் வேலைப்பார்த்த கமலேஷ் என்பவருடன் பழகி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் ஊரில் உள்ளவர்கள் அவமானப்படுத்துவார்களே என எண்ணினார். இது குறித்து தாய் ரேவதியிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் பச்சிளம் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் ஊருக்கு வந்துள்ளனர்.

பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கட்டைபையில் குழந்தையை போட்டனர். அங்குள்ள ஒரு பாலத்தின் பக்கவாட்டு சுவரில் ஈவு இரக்கமின்றி குழந்தையை தூக்கி ஓங்கி அடித்தனர். இதில் அந்த பச்சிளங் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதையடுத்து வீட்டின் பின்புறம் இருவரும் சேர்ந்து புதைத்தனர். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் இருவரும் உண்மையை கூறியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.