விளம்பரத்திற்காக செந்த வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு... இந்து முன்னணி பிரமுகர் கைது!!

 

இந்து முன்னணி பிரமுகர் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், விளம்பரத்திற்காக தன் வீட்டில் அவரே குண்டு வீசிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மேலகாவிரி பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் இந்து முன்னணி மாநகர செயலாளராக உள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சக்கரபாணி, அவரது மனைவி மாலதி ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அதில், சக்கரபாணி விளம்பரத்திற்காக தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகம் ஆடியது அம்பலமானது. மேலும், பெட்ரோல் குண்டு தயாரிக்கப்பட்ட பொருள்களும், சக்கரபாணி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் ஒரே மாதிரியாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளி பிரியா, ஏடிஎஸ்பி சுவாமிநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைத்து சோதனை செய்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், கும்பகோணம் இந்து முன்னணி பொறுப்பாளர் வேதா, பாஜக வழக்கறிஞர் பிரிவு சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து சென்றனர்.

இதையடுத்து அவர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.