லாரி நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு.. இருவரை ஓட ஓட வெட்டி கொலை செய்த டிரைவர்!! ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்

 

மதுபோதையால் சாதாரணமான பிரச்னை வாக்குவாதமாக மாறி இரட்டை கொலையாக முடிந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் டி.புதூர் பகுதியில் வசித்து வருபவர் நிர்மல் (27). இவர் சரக்கு லாரி ஓட்டிவந்துள்ளார். புத்தாண்டு அன்று மாலை தனது லாரியை பழுது பார்ப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியில் உள்ள பழுது பார்க்கும் கடைக்கு வந்துள்ளார்.

லாரியை எடுத்துவந்தவர் பழுது பார்க்கும் கடைக்கு பக்கத்தில் உள்ள சரவணன் (35) என்பவருக்கு சொந்தமான கடை வாசலில் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது கடையில் தனது நண்பர் குழந்தைவேலு (40) என்பவருடன் மது குடித்துக்கொண்டிருந்த சரவணன், தனது கடை வாசலில் நிறுத்திய லாரியை எடுக்க கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் எடுத்துவிடுவதாக நிர்மல் கூறியுள்ளார். ஆனால் மதுபோதையில் இருந்த சரவணனுக்கும் நிர்மலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சரவணனு மற்றும் அவரது நண்பர் குழந்தைவேலு ஆகியோர் நிர்மலை கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர். மேலும அவரது லாரியையும் அடித்து நெறுக்கியுள்ளனர்.

இதில் நிர்மலின் லாரி முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நிர்மல் ஏற்கனவே லாரில் பதுக்கிவைத்திருந்த கத்தியால் சரவணனை சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் அவரது நண்பர் குழந்தைவேலுவையும் விடாத நிர்மல் ஓட ஓட சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை துரத்திச்சென்று கண்மூடித்தனமாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த நண்பர்கள் இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார் தப்பியோடிய நிர்மலை பிடித்தனர். கொலை வழக்கில் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன்றர்.