காரில் தோழியுடன் வந்த கல்லூரி மாணவன.. செல்ஃபி எடுக்க முயன்ற போது விபத்து!

 

கன்னியாகுமரி அருகே கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் வசித்து வருபவர் பிஜூ. நர்சிங் கல்லூரி மாணவரான இவர் தனக்கு சொந்தமான காரில் தோழியான மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த நிஷா என்பவருடன்  திங்கள்சந்தையில் இருந்து அழகியமண்டபம் பகுதி நோக்கி சென்றுள்ளார்.

இன்று மதியம் கார் அழகியமண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது காரை ஓட்டி வந்த பிஜூ காரை ஓட்டி கொண்டிருக்கும் போதே தோழியுடன் செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து  சாலையில் வலதுபுறமாக சென்றுள்ளது.

அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சோனி என்பவர் மீது பயங்கரமாக மோதியது. மேலும் சாலையின் ஓரமாக நின்றுக்கொண்டிருந்த எட்வின் வசந்த் என்பவரின் ஆட்டோ மீதும் மோதி சில அடி தூரம் இழுத்து சென்று நின்றது.

இந்த விபத்தில் கார் மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சோனி என்பவர் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்கான அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தக்கலை போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நர்சிங் கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது