திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து 6 வயது சிறுவன் பலி!! 2 பேர் சஸ்பெண்ட்!!

 

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மூடப்படாமல் கிடந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள சாஸ்திரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (35).  லாரி ஓட்டுநரான இவர், நேற்று மாலை தனது, 6 வயது மகன் பிரதீப்பை அழைத்து கொண்டு, தண்ணீர் பிடிப்பதற்காக வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் குழாய்க்கு சென்றார்.

மணிகண்டன் அங்குள்ள ஊராட்சி குழாஇல் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவரது 6 வயது மகன் பிரதீப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது,  குடிநீர் குழாய் அருகே மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். சிறுது நேரம் கழித்து மகனை காணவில்லை என தேடிய மணிகண்டனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியை எட்டி பார்த்தார். அப்போது, அதில் அவரது மகன் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் வெங்கடாபுரம், ஊராட்சிமன்ற செயலாளர், டேங்க் ஆபரேட்டர் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.